மனசை ரிலாக்ஸாக்க நினைத்தபோது எங்கிருந்தோ வந்து காதில் விழுந்தது ஒரு அழகான கவிதை... அதை சினிமாப் பாடல் என்று கூற முடியாது என்பதால் கவிதை என்று கெளரவமாக கூறுகிறோம்.
இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1972. ஆனால் இப்போது கேட்டாலும் மனசெல்லாம் சொக்கிப் போகும். அப்படி ஒரு காதல் ரசம் சொட்டும் பாடல்...
தனது துணையுடன் இணைந்து அவளை ரசித்து, வர்ணித்துப் பாடுகிறான் அவளது துணைவன்... அந்த வர்னணையில்தான் எவ்வளவு காதல், அன்பு,
பாசம் கொட்டி வழிகிறது பாருங்கள்...
நீலவானின் முழு நிலவே
உன்னை நெருங்கி மகிழும் என் மனமே
நிலவை நெருங்குவதே அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாம். காதலுக்கு மட்டு்தான் இந்த சுகம் வசப்படும். ஒவ்வொரு மனிதனும், தனது துணையை காதலுடன் அணுகும்போது அந்தக் காதலுக்கும் சரி, அப்போது ஏற்படும் உணர்வுகளுக்கும் சரி ஈடு இணையே கிடையாது.
துணைவன் இப்படிப் பாடினால் அந்தம்மா மட்டும் சும்மா இருப்பாங்களா... கொடுத்தேன் என்னைக் கொடுத்தேன் என்று பாட, இவரோ, எடுத்தேன் அள்ளி எடுத்தேன் என்று இன்புறுகிறார். இதை நிச்சயம் காமம் என்றே கூற முடியாது. காதல் மிகுந்து பொங்கும்போது கிடைக்கும் சுகம், காமத்தை விட மிகப் பெரியது, சுகமானது. அதைத்தான் கொடுத்தேன்... எடுத்தேன் என்று ஸ்லாகித்துப் பாடியுள்ளான் இந்தக் கவிஞன்.
காதலின்போது ஒவ்வொரு நினைவுமே நமக்குப் புதுசு புதுசாகத்தான் இருக்கும். புத்தம் புதிதாக பிறந்த குழந்தையைப் பார்க்கும்போது எப்படி ஒரு சந்தோஷம், பரவசம் பிறக்கும்.. அப்படித்தான் காதலின் நினைவுகளும். ஒவ்வொரு நினைவும் பிறக்கும் புதுக் குழந்தை போல அவ்வளவு பரிசுத்தமாக, சுகானுபவமாக இருக்கும்.
ஆணும், பெண்ணும் சேர்ந்தால் செக்ஸ், அப்போதுதான் திருப்தி, சந்தோஷம் என்ற உணர்வுகள் நிச்சயம் நிரந்தரமானவை அல்ல... காமம் பெரிதா, காதல் பெரிதா என்று வாதம் வரும்போது நிச்சயம் காதல்தான் ஜெயிக்க முடியும். காமத்திற்கு இங்கு 2வது இடம்தான். அதைத்தான் இந்தப் பாடலில் சொல்லி வைத்திருக்கிறார் இதை எழுதிய கவிஞன்.
இது ஒரு சினிமாப் பாடல் என்றாலும் கூட ஒவ்வொரு வரியிலும், நமது துணையை எப்படி அணுக வேண்டும், எப்படிக் காதலிக்க வேண்டும், எப்படி போற்ற வேண்டும், எப்படி போஷிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறது.
காதலுக்காக நேரம் ஒதுக்கி, ரசிப்புக்கு நேரம் ஒதுக்கி, லயிக்கும் நிலையை மறந்து திரிவோருக்கு இந்தப் பாடல் நிச்சயம் உணர்வுகளைத் தூண்டி உல்லாசப்படுத்தும்.
சான்ஸ் கிடைச்சா கேட்டுப் பாருங்க...
கருத்துரையிடுக